தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு 33 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் எம்எல்ஏ சண்முகையா பேசுகையில்,
அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ செல்வங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வரவேண்டும் என்பது தமிழக முதலமைச்சரின் நோக்கம். அதன் பேரில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி கற்க செல்லும் மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ் 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்காக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவ மாணவிகளுக்காக 7.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சிபிஎஸ்இ மெட்ரிகுலேஷன் இன்டர்நேஷனல் ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளுடன் போட்டி போடும் வகையில் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவ மாணவிகளுக்காக 7.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மருத்துவத் துறையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 500 பேர் மருத்துவத் துறையில் படித்து வருகின்றனர் . மாணவர்கள் தாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு படிக்க வேண்டும். ஐஏஎஸ் ஐபிஎஸ் சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அப்படி எண்ணத்தை உருவாக்கினால் நாம் வெற்றி பெறுவது உறுதி. போட்டி போட்டு படிக்க வேண்டும், கல்வி என்பது அழியாத சொத்து அதை யாராலும் வாங்க முடியாது.
மாணவர்களாகிய நீங்கள் சைக்கிள் ஓட்டுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் நோய் நொடி இல்லாமல் வாழலாம். மாணவ மாணவிகள் தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மேலும் இந்தப் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி ஓட்டப்பிடாரத்திலிருந்து ஆரைக்குளம் கிராமத்திற்கு அரசு நகரப் பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்எல்ஏ சண்முகையா உறுதியளித்தார் .
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன் மகாலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் நகரச் செயலாளர் பச்சை பெருமாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார் தேன்மொழி சுலைமணி ஒன்றிய தொண்டரணி கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக