பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, 2004ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி காந்திமதி அம்மாள் சமேத நெல்லையப்பர் சுவாமி கோயில் வாசல்கள், 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் மீண்டும் திறந்த வாசல்கள் வழியாக சென்று நெல்லையப்பரை தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் நெல்லையப்பர் ஆலயம் பழமை வாய்ந்த சைவத் திருத்தலமாகும். இவ்வாலயம் தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். ஐம்பெரும் அம்பலங்களில் தாமிர அம்பலம் என்று போற்றப்படும் இத்தலத்தை திருஞானசம்பந்தர் போற்றிப் பாடி உள்ளார்.

இவ்வாலயத்தின் தேர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகும். அதனால் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. எப்போதும் பக்தர்கள் நிரம்பியிருக்கும் ஆலயம் கொரோனாத் தொற்றும் பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு மீண்டும் கோவில்களைத் திறக்க அனுமதி வழங்கியதால், மகிழ்ச்சியுடன் இறைவழிபாடு செய்தனர்.
நான்கு பிரமாண்ட கோபுர வாசல்களுடன் அழகாய்க் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நீண்ட காலமாக ஒரு வாசல் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. கடந்த 2004 ஆம் ஆண்டில் கோவிலின் வடக்கு வாசலில் நடந்த கொலைச் சம்பவத்தால் வடக்குவாசலுடன் சேர்த்து மற்ற இரண்டு வாசல்களையும் அடைத்து விட்டனர். இதனால் கிழக்கு வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் வணங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, கிழக்கு வாசல் தவிர, மற்ற வாசல்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருவிழாக் காலங்களில் மற்ற வாசல்கள் அவ்வப்போது திறக்கப்பட்டாலும், விழா முடிந்தவுடன் உடனடியாக மூடப்படும்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவர்கள், சமீபத்தில் இந்தக் கோயிலை ஆய்வு செய்தார். அப்போது நீண்ட நாட்களாக கோவில் வாசல்கள் மூடப்பட்டிருக்கும் செய்தியை, இப்பகுதி மக்கள் மனக்குமுறலாய் அமைச்சரிடம் தெரிவித்தனர். அவரும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அமைச்சரின் உத்தரவின் பேரில், பூட்டப்பட்டிருந்த கோயில் வாசல்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது அறநிலையத்துறை.
பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலின் அடைக்கப்பட்டிருந்த மூன்று வாசல்களும் திறக்கப்பட்டன. புதிதாய் மீண்டும் திறக்கப்பட்ட வாசல்களில், கோயில் யானை காந்திமதி அழைத்து வரப்பட்டு கஜபூஜை செய்யப்பட்டது. கதவுகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டியபின், பக்தர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
நான்கு வாசல்கள் வழியாகவும் 17 வருடங்களுக்குப் பிறகு, அனுமதி கிடைத்ததால் உற்சாகமான பக்தர்கள் நெல்லையப்பரை உள்ளமுருக மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக