சரயு கால்வாய் திட்டமானது,
இப்பகுதியின் நீர் ஆதாரங்களான ககாரா, சர்யு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைத்து அதன் பயன்பாட்டை அதிகரிக்க உதவியாக அமையும்.
14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உறுதியான நீர்ப்பாசனம் மற்றும் 29 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் சரயு கால்வாய் தேசிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் ₹9,800 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ₹4,600 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரயு கால்வாய் திட்டமானது, இப்பகுதியின் நீர் ஆதாரங்களான ககாரா, சர்யு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைத்து அதன் பயன்பாட்டை அதிகரிக்க உதவியாக அமையும்.
இத்திட்டத்தின் பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டாலும், பட்ஜெட் ஆதரவு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போதுமான கண்காணிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியின்மை காரணமாக, நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இதன் விளைவாக, 2016 ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க இலக்காகக் கொண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட கவனத்தின் விளைவாக, சுமார் நான்கு ஆண்டுகளில் இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு உறுதியளிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும். 6,200 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் இதனால் பயனடைவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களான பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், கோரக்பூர் மற்றும் மஹராஜ்கஞ்ச் ஆகிய 9 மாவட்டங்களுக்கு பயனளிக்கும்.
திட்டத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி விவசாயிகள், மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திறனால் பெரும் பயனடைவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பயனால் அதிக அளவில் விவசாயம் நடைபெறும் என்றும், அதனால் அப்பகுதியின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக