
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற புதிய இணையதளம் அறிமுகம்
கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின்கீழ் உதவி பெறுவதற்காக, புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா, பல இலட்சம் உயிர்களைக் கொன்றுள்ளது. இந்தப் பெருந்தொற்றால் உறவுகளை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். அப்படி பெற்றோரை இழந்து நிர்கதியாய் இருக்கும் குழந்தைகளுக்கு உதவ புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கோவிட் தொற்றில் பெற்றோர் இருவரையும் அல்லது சட்டப்பூர்வ காப்பாளர்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். கடந்த மே மாதம் 29ஆம் தேதி இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நிவாரண நிதியின் கீழ் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். அந்நிதியானது பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக செலவிடப்படும். இத்திட்டத்தின் கீழ் 23 வயதில் அவர்களால் பொருளாதார ரீதியில் தன்னிறைவை அடைய முடியும்.
இதுபற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில் " குழந்தைகளுக்கான PM CARES திட்டம் மாண்புமிகு இந்திய பிரதமரால் 29 மே 2021 அன்று குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது. இத்திட்டம், மார்ச் 11, 2020 முதல் கோவிட் -19 தொற்றுநோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் அல்லது உயிர் பிழைத்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் குழந்தைகளின் விரிவான கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். நீடித்த உடல்நலக் காப்பீட்டின் மூலம் அவர்களின் நல்வாழ்வை செயல்படுத்துதல், கல்வியின் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, 23 வயதை எட்டும்போது நிதி ஆதரவுடன் தன்னிறைவு பெறுவதற்கு அவர்களை தயார்படுத்துவதே இத்திட்டத்தின் அம்சமாகும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்புவோர் https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
உங்கள் கருத்தை பதிவிடுக