
கார்கில் வெற்றி தினம் - 22ஆம் ஆண்டு விஜய் திவாஸ் கொண்டாட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆப்ரேஷன் விஜய்யின் 22வது ஆண்டு கொண்டாட்டங்கள் கார்கில் வெற்றி நாளாக இந்தியா முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் எல்லை வழியாக, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ வைத்தது. 1999ஆம் ஆண்டு இவர்கள் இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபடத் திட்டம் தீட்டி இருந்தனர். இந்திய இராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக "ஆப்ரேஷன் `விஜய்' " என்ற பெயரில் யுத்தத்தில் இறங்கியது. இதன் நீட்சியாக இந்தியாவின் லடாக் எல்லைக்குள் அத்துமீறி ஆக்ரமிப்பு செய்திருந்த பாகிஸ்தான் இராணுவத்துடன் கடும் போர் மூண்டது.
இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உயரமான மலைப்பகுதியில் நடைபெற்ற இந்தக் கடும் யுத்தமானது 1999ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நீண்டது. இந்த பெரும் யுத்தத்தில்,527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆக்ரமிப்பில் ஈடுபட்ட 4,000க்கும் அதிகமான பாகிஸ்தான் இராணுவ வீரர்களும் மற்றும் பயங்கரவாதிகளும் இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறுதியில் ஜுலை 26ல் இந்திய இராணுவம் மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. உலக நாடுகளின் அச்சுறுத்தலால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி அங்கிருந்து வெளியேறியது.
இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜூலை 26-ஆம் நாளை விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்தியா கொண்டாடி வருகிறது.
ஆண்டுதோறும் இந்நாளில், கார்கில் யுத்தத்தில் வீரமரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுவதோடு, வெற்றியடைந்த வீரர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில் கார்கில் தினமாக கடைப்பிடித்து வருகிறது.
இன்று கார்கில் தினத்தின் 22ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை இராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக