எலிவேட்டை ஜெய்பீமாக மாறியதால், சம்பளமாக வாங்கிய பணத்தை திருப்பி அனுப்பிய வசனகர்த்தா : நாவலாசிரியர் கண்மணி குணசேகரன் ஆவேசம்
ஜெய் பீம் படத்திற்கான வட்டார வழக்கு வசனங்களுக்கு உதவி செய்த நாவலாசிரியர் கண்மணி குணசேகரன், தனக்கு சம்பளமாக கொடுத்த 50000தை திருப்பி அனுப்பியதோடு, எலிவேட்டை ஜெய்பீமாக மாறியதைக் கண்டித்து அறிக்கையும் அனுப்பியுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் கண்மணி குணசேகரன். தலைமுறைக் கேடயம், காலடியில் குவியும் நிழல் வேளை போன்ற கவிதை நூல்களையும், சில புதினங்களையும் எழுதியுள்ளார். இவரது நடுநாட்டுச் சொல்லகராதி தமிழக அரசின் சிறந்து நூலுக்கான விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவரிடம் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் கண்மணி குணசேகரனை அணுகி "எலிவேட்டை" என்ற பெயரில் இருளர்களின் வாழ்வியலை திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும், அதற்கு நடுநாட்டு வட்டார வழக்கு உரையாடல்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்., அதை ஏற்று அப்பணியை செய்த நாவலாசிரியருக்கு சம்பளமாக 50000 ரூபாய் வழங்கி இருக்கிறார்.
ஆனால் அதற்கு பிறகு எலிவேட்டை ஜெய்பீமாக மாறியதோடு, கதையின் நோக்கமும் மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கண்மணி குணசேகரன், பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாவிற்கு உதவிய வன்னியர் சமூகத்தினரை அவருக்கு எதிரான குற்றவாளிகளாக சித்தரித்து இருப்பதை ஏற்க முடியவில்லை என்று நீண்ட அறிக்கை ஒன்றினை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் தனக்கு சம்பளமாக வழங்கிய 50000 ரூபாயை தயாரிப்பாளரின் பெயருக்கு காசோலையாக மாற்றி, அந்த அறிக்கையுடன் கொரியர் செய்துள்ள தகவலையும் தனது முகநூல் பதிவில் "வஞ்சகரின் காசை வாங்கித்தான்" என்ற தலைப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே டாக்டர் அன்புமணியின் கேள்விகளால் விஸ்வரூபமெடுத்திருக்கும் ஜெய் பீம் விவகாரம், அப்படத்தில் பணியாற்றிய வசனகர்த்தாவின் இந்த செயலால் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக