மக்கள் மன்றம் கலைப்பு : ரசிகர் மன்றம் தொடரும்- ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
அரசியலில் தான் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்து, அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். காலச்சூழ்நிலை சாத்தியப்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை காலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் அரசியலை விட்டு விலகுவதற்கான காரணங்களைக் கூறி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எழுதியுள்ள ரஜினிகாந்த், 25 ஆண்டுகளாக நீடித்து வந்த அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனால் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார். அரசியல் வருகைக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, இனி ரஜினி ரசிகர் மன்றங்களாகச் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக