மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாகிக் கொண்டிருப்பதாலும், நீர்மட்டம் 120 அடியை எட்டியதாலும் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 119.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியை எட்டி இருக்கிறது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் 22000 இன் அடி நீர் முழுவதும் மதகுகள் வழியாகத் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் உபரிநீர் திறப்பால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரிக் கரையோரம் வசிக்கும் 12 மாவட்ட மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரி பாயும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தகுந்த முன்னேற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக