பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி போன்ற பொங்கலுக்குத் தேவையான பொருட்களுடன், மஞ்சள்தூள், மிளகாய் தூய், மல்லித்தூள், கடுகு போன்ற மளிகைப்பொருட்களும் சேர்த்து 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வருடந்தோறும் பொங்கல் பரிசு, வேட்டி சேலை, பணம் என வழங்கி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இங்குள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ.88 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூய், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் (மொத்தம் 20 பொருட்கள்) அடங்கிய துணிப்பை 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக