ஆடு திருடர்களை துரத்திய உதவி ஆய்வாளர் படுகொலை - திருச்சியில் பயங்கரம்
திருச்சியில் இரவில் ஆடு திருடியவர்களை துரத்தி சென்ற உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் ஆடு கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி நிதி உதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் ஆடு திருடிச்செல்வதைக் கண்டார். அவர்களை தடுத்து நிறுத்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது, திருடர்கள் வண்டியை நிறுத்தாமல் தப்பி சென்றனர். பூமிநாதனும் அவர்களின் வாகனத்தைத் துரத்தி பிடிக்க முயன்று பின்தொடர்ந்தார். கீரனூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதைப் பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்ததால், அதைத் தாண்டி செல்ல முடியாமல் தயங்கி நின்ற திருடர்களைப் பிடிக்க முற்பட்டார்.
இதனை எதிர்பார்க்காத கொள்ளையர்கள் பூமிநாதனை தாக்கியதோடு, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த கீரனூர் போலிசார், பூமிநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பூமிநாதன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, 1 கோடி நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக