வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹20000 : நிவாரணத்தொகையை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் பெய்த கனமழையினால் பயிர்கள் நீரில் மூழ்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் விளைபயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதற்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாய அமைப்புகள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததால், பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ஆம் தேதி நியமித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்த இந்த குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கனமழை பெருக்கெடுத்து ஓடினாலும், காவிரி டெல்ட் உட்பட முக்கிய பகுதிகளில் உடனடியாக ஆய்வினைத் தொடங்கியது இக்குழு.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆய்வினை மேற்கொண்ட இக்குழு, வெள்ளச்சேதம் தொடர்பான விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17,46,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார் 68,652 விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை நிபுணர் குழுவுடன் விவாதித்த முதல்வர் நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு முதற்கட்டமாக ஹெக்டேருக்கு ₹20,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக