கோவில்பட்டி அருகே உள்ள கெச்சிலாபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் முழுமையான குடிநீர் நிறைவேற்றகோரி முற்றுகை
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிழவிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கெச்சிலாபுரம். இங்கு ஜே.ஜே.எம் திட்டத்தில் 500 வீடுகளுக்கு குடி நீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதில், பணிகள் முழுமையாக முடிக்காமல், ஒப்பந்ததாரர் பணத்தை பெற்றுச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும், அம்மன் நகரில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் போரில் புதிய பைப் லைன் அமைக்கவேண்டும். பழுதடைந்த மேல் நிலை குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிய தொட்டி அமைக்கவேண்டும். தெருக்களில் சாலை அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கிராமத்தில் அடிப்படை வசதிகளை அமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கிராம பெண்கள் முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், மக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக