தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் மற்றும் வணிகவியல் துறை சார்பில் உணவு திருவிழா நடை பெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ராமதாஸ் அவர்கள் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் மாறி வரும் சமூகச் சூழலில் பாரம்பரிய உணவு மறைந்து வருகிறது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனித சமூகம் ஆரோக்கியமாக இருந்தது. நவீன வாழ்க்கை முறை மற்றும் புதிய உணவு பழக்கங்கள் பின் பற்றத் தொடங்கிய பின் மனிதன் பல நோய்களுக்கு ஆளாகி பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்று பேசினார். வணிக நிர்வாகவியல் மூன்றாமாண்டு மாணவி மாலதி வரவேற்றார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார்.
வணிகவியல் துறைத்தலைவர் வினோத் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வின் நடுவர்களாக தமிழ்த்துறை பேராசிரியர் சிவக்குமார் , உடற்கல்வி இயக்குநர் கணேசன் , கணிதவியல் துறைத்தலைவர், செல்வி மற்றும் ஆங்கிலத் துறை பேராசிரியர் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த உணவுப் பொருள்களை தேர்வு செய்தனர். பாரம்பரிய உணவு வகைகளான புட்டு, கூழ் வகைகள், அச்சு முறுக்கு, முளை கட்டிய சிறுதானியங்கள், கொழுக்கட்டை பயறு வகைகள் போன்ற உணவுகளை கல்லூரியில் தயார் செய்தனர்.

விழாவில் கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவுப் பொருள்களை சுவைத்து மகிழ்ந்தனர். இதில் முதல் பரிசு பெற்ற வணிக நிர்வாகவியல் துறை மாணவி துர்கா தேவி மற்றும் வணிகவியல் துறை மாணவி சண்முக செல்வி இருவருக்கு தலா ₹ 500 ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற மாணவ/மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியை த. சதானா கருத்தரங்கை தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக