கோவையில் பள்ளியை விட்டு விலகியும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி - போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
கோயம்புத்தூர் சின்மயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் கோட்டைமேடு பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், அந்த மாணவி மெட்ரிக் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று, அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியை மாற்றினாலும், ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்தால், மனமுடைந்த அந்த மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய அந்த கடிதத்தில், தன் மரணத்துக்கு காரணமாக சிலரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு, சின்மயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியைக் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை, ``என் மகள் படிப்பில் சிறந்தவர். தொடர்ந்து முதல் ரேங்க் எடுத்து வந்தார். ஆனால், மிதுன் சக்கரவர்த்தி அவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இது தொடர்பாக என் மகள் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அதனால், வேறு பள்ளியில் சேர்த்தோம். இந்தக் காரணங்களால் என் மகள் மன உளைச்சல் இருந்தார். மிதுன் சார் டார்ச்சரால்தான் அவர் இப்படிச் செய்துவிட்டார்" என்று கதறி அழுதார்.
பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணம், கோவையில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மாணவிக்கு ஆதரவாகவும், பாலியல் சீண்டலுக்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கலெக்டர் அலுவலகம் முன்பும், சின்மயா பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போர்க்கொடி உயர்த்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட அந்த ஆசிரியர் மீதும், புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை வைத்துள்ளனர்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பள்ளியை விட்டு விலகினாலும் மாணவிகளுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம், இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகத் தெரிகிறது. வேறு சில மாணவிகளும் அவர் பாலியல் சீண்டல்களைப் பற்றி தெரிவித்துள்ளதால், வழக்கு விசாரணை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போனைக் கைப்பற்றி இருக்கும் போலீசார், அவரது உரையாடல்கள் மற்றும் கால்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அதே வேளையில், மாணவி இறப்பிற்கு முன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும், ரித்துவின் தாத்தா, எலிசா சாருவின் அப்பா யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக