பிரித்வி ஷா, இஷான் கிஷன் அதிரடியில்
இலங்கையைப் பந்தாடிய இந்தியா பி
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பிரித்வி ஷா மற்றும் இஷான் கிஷனின் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
ஷிகார் தவான் தலைமையிலான இந்தியா ஸ்ரீலங்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு போட்டியாக, இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய அவிஸ்கா பெர்ணான்டோ மற்றும் மினோத் பானுகா நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தள்ளாடிய இலங்கை, கடைசி கட்டத்தில் கருணரத்னேவின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் 262 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப், சாஹல் மற்றும் சாளரம் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக பந்து வீசிய குருணால் பாண்ட்யா 10 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு, பிரித்வி ஷா அதிரடியான துவக்கத்தைக் கொடுத்தார். 24 பந்துகளில் 9 பவுண்ட்ரிகளுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் சிக்ஸரும் ஃபோருமாக மிரட்ட இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்றது. இஷான் கிஷன் 42 பந்துகளில் 8 ஃபோர்ஸ் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து துவங்கிய இஷான் கிஷன், அறிமுக போட்டியில் அரைசதம் எடுத்து அசத்தினார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் ராபின் உத்தப்பாவிற்கு பிறகு அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
பின்னர் களமிறங்கிய மனீஷ் பாண்டே 26 ரன்களில் வெளியேறினாலும், பொறுப்பாக ஆடிய கேப்டன் தவான், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 95 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். 36.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதிரடியான துவக்கம் அளித்த பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இப்போட்டியில் இந்தியா கேப்டன் 6000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்தார். இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக, இந்திய அணியை பி டீம் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்திருந்தார்.
உங்கள் கருத்தை பதிவிடுக