"த்ரில்" வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா : சாஹர், புவி அபாரம்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில், இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி உள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிகள் போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். ஆனால் வழக்கம் போல் மிடில் ஆர்டர் சொதப்ப தடுமாறிய இலங்கை அணியை அஸ்லங்கா மற்றும் கருணரத்னே கரை சேர்த்தனர்.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அவிஸ்கோ பெர்ணான்டோ மற்றும் அஸ்லாங்கா அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் கருணரத்னே அதிரடியாக ஆடி 44 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், சாஹல் தலா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, அதிரடியாய் துவங்கினாலும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் போட்டியில் அசத்திய ப்ரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் இந்த போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சற்று தாக்குபிடித்து ஆடிய தவான் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியாவை மணிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் சரிவில் இருந்து மீட்டனர். துரதிஷ்டவசமாக பாண்டே 37 ரன்களில் ரன் அவுட்டானர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்களிலும், குருனால் பாண்டியா 35 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து தள்ளாடியது. வெற்றிக்கு இன்னும் 83 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பொறுப்பாக ஆடிய தீபக் சாஹர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஜோடி இந்திய அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தது.
சிறப்பாக விளையாடிய தீபக் சாஹர் 82 பந்துகளில் 7 ஃபோர்ஸ் 1 சிக்ஸருடன் 67 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு துணையாக புவனேஸ்வர் குமார் 19 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹஸ்ரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

சிறப்பாக ஆடிய தீபக் சாஹர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது. மூன்றாவது போட்டி 23 ம் தேதி நடைபெற உள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக