டிராவிட்டை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன்
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.விஎஸ் லெட்சுமணன் விரைவில் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன. கங்குலியின் வேண்டுகோளுக்கு ஏற்ப லெட்சுமணன் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் சங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) பெங்களுரூவில் செயல்பட்டு வருகிறது. இந்த என்.சி.ஏ இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களை பட்டைதீட்டுவதும், காயமடைந்த வீரர்களுக்கு குணமடைய உதவும் புனர்வாழ்வு (rehabilitation) பயன்பாடுகளுக்காவும் செயல்பட்டு வருகிறது.
இருக்கும் இடம் தெரியாமல் இருந்த வந்த இந்த அமைப்பு, இந்தியக் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இதன் தலைவரான பிறகு செயல்பாடுகளிலும் திறனிலும் மேம்பாடு அடைந்தது. புதிய உத்வேகமுள்ள வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தோடு, காயமடைந்த வீரர்களும் மேம்பட்ட திறனோடு வெளிவந்தனர். ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலே இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
இந்நிலையில் ராகுல் திராவிட் இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால், என்.சி.ஏ தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது. இப்பதவிக்கு வருவதற்கு பலரும் முனைப்பு காட்டினாலும், பிசிசிஐ யின் தலைவர் கங்குலிக்கு வி.வி.எஸ் லெட்சுமணன் அந்த பதவிக்குச் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அதுபற்றி அவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிகிறது. இதனைப் பரிசீலித்த லெட்சுமணன் அதற்கு பச்சைக் கொடி காட்டி உள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் மென்ட்டாராக இருந்த லட்சுமணன் அப்பதவியிலிருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி சன்ரைசர்ஸ் நிர்வாகத்திடம் விரிவாகப் பேசிய லட்சுமணன் அப்பதவியிலிருந்து விலகி உள்ளார். இதனால் விரைவில் என்.சி.ஏ தலைவராக அவர் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
இந்திய அணியின் தலைசிறந்த ஆட்டக்காரர்களான கங்குலி, டிராவிட், லெட்சுமணன் கரங்களில் இந்தியக் கிரிக்கெட் நிர்வாகம் இருப்பதால், இந்திய கிரிக்கெட் அணியின் தரம் மேம்படும் என இரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக